சிங்கை பெருங்கிழார் சுப்பையாவுக்கு 74 வது பிறந்த நாள் கொண்டாடினர்
தமிழர் சீர்திருத்தச் சங்கம் அளித்த விருந்து
சீர்திருத்த விதை இங்கு ஊன்றச் செய்த அவர் வாழ்க என வாழ்த்து
தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் ஆலோசகரும், சங்கம் இங்கு நிறுவப்பட்டு பணியாற்றக் காரணமானவரும் பெருங்கிழாருமான திரு.அ.சி. சுப்பையா அவர்களின் 74 வது பிறந்தநாளைக் கொண்டாடு முகத்தான் திரு. அ.சி. சுப்பையா, திருமதி அஞ்சலை சுப்பையா ஆகிய இருவருக்கும் நேற்று மாலை அடெல்பி ஹோட்டலில் சங்க அங்கத்தினர்களின் சார்பில் ஒரு தேநீர் விருந்து நடத்தப்பட்டது.
அடெல்பி ஹோட்டலில் மாடிப்படி ஏறிச்செல்லமுடியாத நிலையில் திருமதி அஞ்சலை சுப்பையா அவர்கள் இருந்தும் கூட, அன்பர்கள் அழைப்புக்கிணங்கி வந்தது பாராட்டத்தக்கது.
விருந்திற்குப் பிரமுகர்களும் சங்க நிர்வாகிகளும் அங்கத்தினர்களும் சமாதான நீதிபதிகளும் வந்திருந்தார்கள்.
தேநீர் விருந்திற்குப் பின் த.சீ.சங்கத் தலைவர் திரு.கோ. சாரங்கபாணி அவர்களால் திரு. அ.சி. சுப்பையா அவர்களுக்குப் மலர் மாலை அணி விக்கப்பட்டது. பின்னர் திரு.அ.சி. சுப்பையா அவர்கள் சங்கச் சார்பில் தரப்பட்ட இன்னொரு மலர் மாலையைத் தம் இல்லக் கிழத்தியார் அஞ்சலைக்குச் சூட்டினார்.
சங்க அங்கத்தினர்கள் சார்பில் வாழ்த்துப் பத்திரம் ஒன்றைச் சங்கத் தலைவர் திரு. கோ.சாரங்கபாணி அவர்கள் வாசித்துத் தம்பதி இருவரிடமும் அளித்தார்கள். திரு.அ.சி. சுப்பையாவின் 74 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தங்களின் அன்பளிப்புகளைப் பலரும் வழங்கி னார்கள்.
திரு.அ.சி. சுப்பையாவை வாழ்த்திப் பலர் பேசினார்கள்.
முதலில் பேசிய திரு. வீராசாமி, சீர்திருத்தத்தை வீட்டிலும் வெளியிலும் நல்லமுறையில் இதுவரை கடைப்பிடித்து வருபவர் திரு.அ.சி. சுப்பையா. அவர்கள் வாழ்க என்று கூறினார்.
அடுத்துப் பேசிய இந்தியன் டெய்லி மெயில் உதவி ஆசிரியர் திரு. செல்வகணபதி, திரு. அ.சி. சுப்பையா வின் சீர்திருத்தத் தொண்டு தமிழர் சமுதாயம் அறிந்த ஒன்று ; அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து வளம்அடைய வேண்டுகிறேன் என்று கூறினார்.
மூன்றாவதாகப் பேசிய திரு.ஆ.சு.இராமலிங்கம், பிணி போக்க மருந்தும் அறியாமை போக்க சீர்திருத்தக் கல்வியும் தந்து பிற்போக்குக் கருத்துக்களை மலாயாவில் முறியடித்த பெரியார் திரு.அ.சி. சுப்பையா என்று கூறினார்.
அடுத்துத் தமிழர் சீர்திருத்தச் சங்க நிர்வாக உறுப்பினர் திரு. அ. லட்சுமணன் பேசினார். சீர்திருத்தத்தை மலாயாவில் வேரூன்றச் செய்தவர் திரு.அ.சி. சுப்பையா என்பது மறைக்கவோ மறக்கவோ முடியாத உண்மை என்று பாராட்டினார். மேலும் சொன்னார் :‡
திரு.அ.சி. சுப்பையாவும் திருமதி அஞ்சலையும் முன்பு மலர் மாலையுடன் மணநாளன்று இருந்திருப்பர். இன்று 74 வயதினர் அவரும் , 64 வயதினராகிய அம்மையாரும் மலர்மாலையுடன் இருக்கக் கூடிய காட்சி மகிழ்ச்சி தருகிறது.
திரு.உ.இராமசாமி நாடார் அளித்த சங்கக் கட்டிடம் சிராங்கூன் ரோடிலிருக்கிறது என்றும் ஆனால் அது பழுதுற்றுக் கிடக்கிறது என்றும் சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திரு.அ.சி. சுப்பையா புதுப்பித்துத் தந்தால் தமிழர் மனக்கோவிலில் அவர் இடம் பெற்று நீடு வாழ்வார் என்றும் மேலும் லட்சுமணன் கூறினார்.
அடுத்து திரு. அ.இ.அகமது பேசினார், 1929‡இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி பினாங்கு சென்று பெரியார் இங்கு விஜயம் செய்ய வழி உண்டாக்கிச் சீர்திருத்தம் இந்நாட்டில் நிலை பெறச் செய்ய வழிகோலியவர் திரு.அ.சி. சுப்பையா என்று கூறினார்.
அடுத்து திரு. வீரமணி பேசினார்:-
திரு.அ.சி. சுப்பையா அவர்கள் சிங்கப்பூரில் பிறந்து 10 வது வயதில் இந்தியா சென்று, தாம் கருத்துக் கொண்ட அஞ்சலை அம்மையாருடன் சிங்கை வந்து திருமணம் செய்து கொண்டார் என்றும் சிற்பம், சித்திரம் முதலிய கலைத் தொழில் கொண்டும், காந்தரசம் என்ற மருந்து தயாரிப்பின் மூலமும் உயர்ந்து இன்று ஒரு பெருநிலை அடைந்தார் என்றும் கூறி அவரின் வாழ்க்கையைச் சுருங்க எடுத்துரைத்தார்.
வாழ்த்துரைகட்கும், சங்கத்தின் உபசரிப்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய திரு.அ.சி. சுப்பையா அவர்கள் தம் சார்பிலும் தம் மனைவியார் சார்பிலும் சங்க அங்கத்தினர்களின் அன்பின் பெருக்கத்துக்குத் தம் மனமுவந்த நன்றியைத் தெரிவித்து மேலும் சொன்னதாவது:-
தமிழர் சீர்திருத்தச் சங்கம் 1932 உற்பத்தியாயிற்று. அப்போது அதன் முதல் தலைவர் திரு.ஐ.ஐ.முதலியார் நாகலிங்கம் ஜே.பி. ஆவார். அதன் உப தலைவராக நான் இருந்தேன். அப்போதைய காரியதரிசி திரு. கோ. சாரங்கபாணி.
சங்கம் 1935 வரை 8, கிந்தா ரோடில் இருந்தது. பின்னர் 20 கிள்ளாங் ரோடிற்கு வந்தது. இதுவரை பல சீர்திருத்தப் பணிகளைத் தமிழர் சமுதாய நலனுக்காக ஆற்றியுள்ளது. த.சீ.சங்கத்திற்குத் தனி இல்லம் தேவை என்ற பொறுப்பு ணர்ந்து நான், அப்போது சங்க முயற்சியால் ஜே.பி. பட்டம் பெற்ற திரு.உ.இராமசாமி நாடார் அவர்களின் பின்சென்று சங்க இல்லம் பற்றி அவரிடம் வற்புறுத்தி, இறப்பவர் என்றும் வாழ ஒரு திருப்பணி சமூகத்துக்குச் செய்ய வேண்டுமென்று கூறி, சிராங்கூன் ரோடிலுள்ள கட்டிடத்தைப் பெற்றேன்.
தமிழர் ஸ்தாபனம் எதற்கும் இல்லாத தனிக் கட்டிடம் த.சீ. சங்கத்திற்கு உண்டு. ஆதலால் அது செப்பனிடப்பட்டாக வேண்டும். அதற்குத் தமிழர் ஐக்கியப் பட வேண்டும் என்றும் அ.சி. சுப்பையா கூறினார்.
தமக்கு பேரன் பேத்திகள் 36 பேர் என்று திரு. அ.சி. சுப்பையா அறிவித்தார்.
இறுதியாகச் சங்கத் தலைவர், சங்க அங்கத்தினர்களின் அன்பை வெளிக் காட்டும் வாய்ப்பாக அளிக்கப்பட்ட தேநீர் விருந்திற்கு விஜயம் செய்த திரு. சுப்பையா அவர்கட்கும் திருமதி. அஞ்சலை அவர்கட்கும் முதலில் நன்றி தெரிவித்தார். மற்றும் தேநீர் விருந்தில் வந்து கலந்து கொண்ட பிரமுகர் களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதற்கு முன்பு சங்கம் திரு. அ.சி. சுப்பையாவின் 74 வது பிறந்த நாளைக் கொண்டாடுவது பற்றிய உரிமை என்ன என்பது பற்றிக் குறிப்பிட்டார். த.சீ.சங்கம் நிறுவப்பட்டு வளர, நற்றொண்டாற்ற சங்கமும் சுப்பையாவும் ஒன்றாகக் கொட்டியும் ஆம்பலும் என ஒட்டி உறவு கொண்டு நின்று உழைத்ததுவும், சங்கத்தின் இன்ப துன்பங்களில் கலந்து நின்றதுவும் ஆகும் என்றும் திரு. கோ.சாரங்கபாணி அவர்கள் குறிப்பிட்டார்கள். (தமிழ் முரசு 16.12.1954)
No comments:
Post a Comment