Sunday, December 26, 2010

உ.ராமசாமி நாடாருக்கு பாராட்டுக் கூட்டம்

உ.ராமசாமி நாடாருக்கு பாராட்டுக் கூட்டம்

சிங்கப்பூர் தமிழர் செல்வர் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்களுக்கு அரசாங்கத்தார் சமாதான நீதிபதி பட்டம் வழங்கியதைப் பாராட்டும் பொருட்டு தோழர் நாடாரவர்களின் தோழரான தோழர் பி. இரத்தினம் அவர்களால் நேற்று இரவு தமது துல்லக்வரோ பங்களாவில் நடத்திய பெரும்விருந்திற்கு இவ்வூரின்கண் வதியும் எல்லா சமூகப் பிரமுகர்களும் சுமார் 500பேர்கள் வரை விஜயம் செய்திருந்தனர். இவர்களைக் களிப்பிக்க ஒருபுறம் மலாய்ப் பெண்களின் ரோங்கினும் மற்றோர்புறம் இளைஞர்களின் சங்கீதமும் நடைபெற்றன. பிரதம விருந்திற்குரிய சாப்பாட்டு மண்டபம் அழகிய கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆகாரங்களும் பானங்களும் பரிமாறப்பட்டு விருந்துண்ட பின்னர் தோழர் இரத்தினம் அவர்கள் தோழர் நாடார் அவர்களுக்கு அழகிய புஷ்பமாலை அணிவித்தார். இவ்வூர் சட்டசபை அங்கத்தினரும் பிரபல லாயருமான தோழர் டசில்வா அவர்களுக்கும் மாலை அணிவித்து தமது சார்பில் தோழர் நாடார் அவர்களுக்கு உபசாரம் கூறும்படிக் கேட்டுக் கொண்டார். அவ்வாரே தோழர் டிசில்வா அவர்கள் பேசிய தன் சுருக்கமாவது:-

தமது சார்பில் தோழர் நாடார் அவர்களுக்கு உபசாரம் கூறும்படி எனது நண்பர் தோழர் இரத்தினம் கேட்டுக் கொண்டார். தோழர் நாடார் அவர்களை அவரின் சமூகத்தாரின்றி பிற சமூகத்தினரும் நன்கு அறிவர். என் இளமை முதலே தோழர் நாடாரின் கீர்த்தியையும், செல்வாக்கையும் அறிவேன். நான் லாயர் தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவரின் புகழ் நன்றாய் பரவியிருந்தது. தோழர் இரத்தினம் அவர்களின் குடும்பத்தினரும் தோழர் நாடார் அவர்களின் குடும்பத்தினரும் சுமார் 25 வருடமாய் மிகவும் நெருங்கிய தொடர்வு வைத்திருக்கிறன்றனர்.

தோழர் நாடார் அவர்கள் யுத்த நிதிக்கு தாமாகவே பெரிய நன்கொடை வழங்கி தனத சமூகத்தினர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன் அவரே முன்னின்று தன் சமூகத்தினர்களையும் பெரும்தொகை சேர்த்து யுத்த நிதிக்கு வழங்கச் செய்தார். இந்திய துருப்புகளின் உபசரிப்பிலும் தோழர் நாடார் அவர்கள் அதிகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

செல்வரான தோழர் நாடார் அவர்கள் தம் சமூகத்தினர்களுக்கு வழங்கியுள்ள நன்கொடைகளை அச் சமூகத்தினர் நன்கறிவர். இவைகளை எல்லாம் விளம்பரப் படுத்திக் கொள்ள தோழர் நாடார் அவர்கள் விரும்பவில்லை. தம்மைப்பற்றி தாமே பிரமாதப் படுத்தி எழுதியும் பிறரை விட்டு எழுதச் சொல்லியும் அதைப் பத்திரிகையில் பிரசுரித்துக் கொள்ளுவோர் பலருண்டு. அத்தகைய தற்புகழ்ச்சியை தோழர் நாடார் அவர்கள் முற்றாய் வெறுப்பவர். வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக கூடாதென்ற மேலான சித்தாந்த முடையவர் தோழர் நாடார். இவ்வருங்குணங்கள் நிரம்பப் பெற்ற நமது தோழர் நாடார் அவர்களுக்கு அரசாங்கத்தார் சமாதான நீதிபதி பட்டம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. அப்பாராட்டையே இன்று நாம் செய்கின்றோம். தோழர் நாடார் அவர்கள் இன்னும் அதிக பாக்கியங்களைப் பெற்று பட்டதாரியாய் நீடுழி வாழப் பிரார்த்திக்கேறன்.

தோழர் நாடார் அவர்கள் இந்த உபசார வார்த்தைகளுக்குப் பதிலளிக்கையில்,
தலைவர்கள் அவர்கள் என்னைப் பற்றிய பேசிய அன்பான வார்த்தைகளுக்காக என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

கனவான்களாகிய நீங்கள், திரேக சிரமததையும் சொந்த வேலைகளையும் பொருட்படுத்தாது இன்று இவ்விடம் வந்து என்னை கெளரவப்படுத்தியதற்காக உங்கள் யாவருக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

நண்பர் ரத்தினம் பிள்ளை அவர்கள் திரேக சிரமத்தையம் பணச் செலவையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பது அவர்களுக்கு என்மேலுள்ள நல்லெண்ணத்தையும் அன்பையும் காட்டுகிறது.

மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் எனக்கு சமாதான நீதிபதி என்ற பட்டத்தைக் கொடுத்திருப்பதைக் குறித்து ஒரு சங்கத்தார் ஒரு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டதற்கு நான் இணங்காமல் அந்த கொண்டாட்டத் திற்காக வசூல் செய்த பணத்தை யுத்த நிதிக்கு அனுப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. சங்கங்களின் அபிவிருத்தியை முன்னிட்டு அங்கத்தினர்கள் சேர்த்து வைத்துக்ளள சேம நிதிகளை விருந்துபசாரங்களில் விரயம் செய்வது சரியல்ல. யுத்த காலத்தில் அவ்வாறு விரயப்படுத்தும் பணங்களை யுத்த நிதிக்கு கொடுப்பது சிறந்த காரியமாகும்.

மன்னர்பிரானுக்காவும் தேசத்திற்காகவும் எத்தனையோ பேர்கள் உயிரைக் கொடுத்து நடத்தும் யுத்தத்திற்கு நாம் எவ்வகையிலும் பணத்தை யாவது கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். இருந்த போதிலும் நண்பர் ரத்தினம் பிள்ளை அவர்கள் தனிப்பட்ட முறையில் சிநேகிதர் என்ற காரணத்தால் விருந்து நடத்தியதால் அவர்களுக்கும் இங்கே விஜயம் செய்த உங்கள் யாவருக்கும் என் வந்தனத்தை மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறினார்.

கடைசியாக திரு இரத்தினம் அவர்கள் மலாய் பாஷையில் வந்திருந்தோர் எல்லோருக்கும் தமது வந்தனத்தைத் தெரிவித்துக் கொண்டதோடு விருந்தில் ஏதேனம் குறைபாடுகள் இருந்தால் அவற்றிற்கு மன்னிக்கும்படி யாகவும் கேட்டுக் கொண்டார். இத்தோடு விருந்து கூட்டம் வெகு குதூகலமாய் கலைந்தது.

No comments:

Post a Comment